• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

பாவை - 2

AArani

New member
Joined
Mar 27, 2025
Messages
25
பாவை - 2




அவரின் பேச்சில் இரு ஆண்களும் அதிர்ந்து நிற்க, மாறனின் பார்வை அப்படியே காவ்யாவின் புறம் திரும்பியது. அவன் பார்வையிலேயே நடுங்கிப் போனவள் விழிகளை ஏகத்துக்கும் விரித்து அவளின் பயத்தையும் வெளிக்காட்டிட, "போலீஸ் தம்பி" என்று மீண்டும் அவனை அழைத்து அவனின் பார்வையைத் தன்புறம் திரும்ப வைத்தார்.

'என்னடா இது புதுசா இருக்கு.? உண்மையாவே இந்த பொண்ணு மாறனை லவ் பண்ணுதா.? வாய்ப்பிருக்காது.. ஏன்னா நம்ம பையன் குணம் அப்படியாச்சே.?' என்று அதிரன் ஒரு பக்கம் யோசனையில் ஆழ்ந்திருந்தான்.

காவ்யாவும் 'போச்சு போச்சு இந்த அப்பா எனக்கு அந்த தென்னைமரம் கையால கருமாதி பண்ணாம ஓயாது.. இப்ப நான் என்ன பண்ணுவேன்.? இப்ப நான் செய்யுவேன்.? அந்த தென்னைமரம் ஏதாவது கேட்டா நான் என்ன பதிலைச் சொல்லுவேன்.? அய்யோ அய்யோ..' என்று புலம்பினாள் மனதினுள்.

அவரின் பேச்சில் அலுத்துப் போன மாறன் "இப்ப என்னங்க.?" என்றிட, "மன்னிச்சுருங்க தம்பி.. இப்படி நடுரோட்டுல வெச்சு பேச வேண்டியதா போய்ருச்சு.." என்று விட்டு "ஏய் புள்ள வீட்டு அட்ரஸை ஒரு பேப்பர்ல எழுதி குடு.. நேரமிருக்கறப்ப தம்பி வீட்டுக்கு வரட்டும்" என்று தன் மகளை அதட்டினார்.

"எதே.? அட்ரஸா.? எப்போவ் என்னப்பா பண்ணிட்டு இருக்க நீ.? பேசாம வா.. ப்ச் வாங்கறேன்ல.?" என்று அவரை இழுத்துக் கொண்டு செல்ல முயன்றிட, அவரோ விடாமல் அதட்டி உருட்டி மகளின் கையாலே அவர்களின் வீட்டு முகவரியை எழுதி மாறனின் கையிலும் திணித்தார்.

"நேரமிருக்கறப்ப வீட்டுக்கு வாங்க தம்பி.. நம்ம மத்ததை பேசலாம்.. உங்களுக்குப் பிடிச்சா மட்டும் தான் நான் உங்க அப்பா, அம்மாகிட்ட பேசுவேன்.. இப்ப நான் கிளம்பறேன்ங்க தம்பி" என்று பவ்யமாக அவனிடம் இருந்து விடைப்பெற்றார்.

காவ்யாவும் அவனைத் திரும்பி திரும்பி பார்த்தபடியே செல்ல, அவளைக் கண்ணைச் சுருக்கிப் பார்த்தவன் சைகையால் 'இங்க வா' என்றழைக்க, 'அய்யோ நானில்ல' என்று வேகவேகமாக திரும்பியும் கொண்டாள்.

அதிரன் தான் குழம்பி போய் "டேய் இங்க என்னடா நடக்குது.? அந்த பொண்ணு யாருடா.?" என்று கேட்க, "என்னைய கேட்டா.? அவங்களே வந்தாங்க.? அவங்களே பேசுனாங்க.. அவங்களே கிளம்பிட்டாங்க.. இதுல என்கிட்ட என்ன நடக்குதுனு கேட்கற.?" என்றான் அசால்ட்டாக.

'என்ன இவன் அவங்களுக்கு மேல குழப்பறான்.? உண்மையாவே அந்த பொண்ணு யாருனு இவனுக்குத் தெரியாதா.? இல்ல தெரியாத மாதிரி நடிக்கறானா.? இவனுக்கும் பொண்ணுகளுக்கும் தான் ஆகாதே' என்று பலவாறான எண்ணங்கள்.

மீண்டும் மாறனைப் பத்திரிகையாளர்கள் சூழ்ந்துக் கொள்ள, "இந்த போராட்டத்திற்கு முடிவு எப்ப சார்.?" என்றும் கேட்க, தலையைச் சாய்த்து இக்கேள்வியைக் கேட்டவனைக் கூர்ந்தும் பார்த்து "ம்ம்ம்ம் குற்றவாளியைக் கண்டுபிடிக்கறப்ப தான்.." என்றான் எடக்குமடக்காக.

சார் இந்த கேஸ் உங்ககிட்ட வந்தா நீங்க ஏத்துப்பீங்களா.?

உங்களால குற்றவாளியைக் கண்டுபிடிக்க முடியுமா.?

நீங்க ஏன் சார் இந்த கேஸை எடுத்து நடத்தக் கூடாதா.?

இந்த கேஸூல இருந்து நீங்க விலகிக்கலாம்னு இருக்கீங்களா.?

உங்களாலயும் குற்றவாளி யாருனு கண்டுபிடிக்க முடியாதா.?

கமிஷ்னர் உங்ககிட்ட இந்த கேஸைக் குடுத்தா வாங்க மாட்டிங்கனு ஒரு பேச்சும் போகுது.. அது உண்மையா.?

என்று பலவிதமான கேள்விகள் அவனைச் சூழ்ந்து நின்றது. அவன் யாருக்கும் எக்கேள்விக்கும் பதிலளிக்கவில்லை. பதில் கூறவும் அவன் விரும்பவில்லை.

பதிலின்றி அவன் நகர பார்க்க, "சார் பதில் சொல்லிட்டு போங்க.. இப்படி போனா என்ன அர்த்தம்.? எங்களைய அவமதிக்கறீங்களா.?" என்று அவனை நகர விடாமல் வழிமறுத்தும் நின்றனர்.

உங்களைய பகைச்சுக்கிட்டு என்னால இந்த நாட்டுல நடமாட முடியுமா.? என் கைக்கு இந்த கேஸ் வந்தா தான் என்னால பதில் சொல்ல முடியும்.. கமிஷ்னர் சார் என்ன நினைக்கறாரோ.? அவரை மீறி என்னால ஒன்னும் பண்ண முடியாது" என்றவன் 'அவ்வளவு தான் நீங்க கிளம்பித்தான் ஆகணும்' என்பதைப் போல் கடுமையான பார்வையுடன் சைகையும் புரிந்தான்.

அவரின் பார்வையின் அர்த்தமுணர்ந்து முணுமுணுத்தபடி அவர்களும் நகர்ந்திட, அப்போதே கமிஷ்னரிடம் இருந்து அவனுக்கு அழைப்பும் வந்தது.

'எப்படியும் இந்த வழக்கு தன்னிடம் தான் இறுதியில் வந்து நிற்கும் என்பதை முதலிலே ஊகித்துத் தான் இவன் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கிறான்.. அதுவே நடக்கவும் செய்தது. இதோ இவனின் கையிலும் கிடைத்து விட்டது.

இவனின் மேலுள்ள நம்பிக்கையில் போராட்டத்தையும் மீனவ இளைஞர்கள் முடிவுக்கு கொண்டு வர, அவர்களுக்கு நன்றி கூறும் விதமாக சல்யூட் ஒன்றை அவர்களை நோக்கி வீசினான். அதில் இளைஞர்களின் மனதும் நிறைந்தது. எப்படியும் பெண்களின் தற்கொலைக்கான காரணம் என்னவென்று அறிந்து அதற்கான தீர்வும் கிடைத்து விடும் என்ற புது நம்பிக்கையும் அவர்களைச் சுழ்ந்தது.

'இவன் பண்றது ஒன்னுமே புரியலயே.?' என்ற எண்ணத்தில் நின்றிருந்தவனை நோக்கி கோவச்சிவப்புடன் வந்த பெண்ணொருத்தி "ஹலோ அதிரன்.. நீங்க என்ன நினைச்சுட்டு இருக்கீங்க.? என்னைய பார்த்தா உங்களுக்கு எப்படித் தெரியுது.?" என்று சீறினாள்.

அவளை மேலும் கீழுமாக பார்த்த அவனும் "இன்னைக்கு தான் பொண்ணு மாதிரி தெரியுது மேடம்.. அதைய கேட்க தான் வந்தீங்களா.?" என்றிட, புஸ்புஸ்வென கோவ மூச்சை வெளியிட்டு அவனை முறைக்கத் தொடங்கி விட்டாள் அவள்.

"என்ன முறைப்பு.? இப்படி பொதுவெளில நின்னு முறைக்கறது ரொம்ப தப்பு.."

"ஆஹான் நீங்க பண்றதுக்கு கொஞ்சவா செய்ய முடியும்.?"

"நான் என்ன பண்ணுனேன்.?"

"உங்ககிட்ட பேசிட்டு போன பொண்ணு யாரு.?" என்று கடுப்புடன் கேட்டாள். இவனிடம் தான் காவ்யாவும் அவளின் தந்தையுய் பேசி விட்டுச் சென்றார்கள் என்று நினைத்து விட்டாள். மாறனிடம் தான் யாரும் பேச முடியாதே.. அதனால் மாட்டிக் கொண்டது அதிரன்.

"அதைய தெரிஞ்சு நீ என்ன பண்ண போற.?"

"என்ன வேணாலும் பண்ணுவேன்.. என்னடா என்னைய பார்த்தா எப்படி தெரியுது.?"

"ப்ச் இதையவே எத்தனை தடவை தான் கேட்ப நீ.? இப்படி கேட்டுட்டே இருந்தா இந்த மூஞ்சியைப் பார்க்கவே முடியாம போய்ரும்"

"அதிரன் விளையாடாத.. வந்தது யாரு.?"

"நான் ஏன் சொல்லணும்.? நான் ஏன் சொல்லணும்.? நீ வந்ததும் இதைய பொறுமையா கேட்டுருந்தா சொல்லிருப்பேன்.. இப்ப கண்டிப்பா சொல்ல முடியாது" என்று நின்றான் அதிரன்.

கடுப்பில் பல்லை மட்டுமே இவளால் கடிக்க முடிந்தது. இவனின் பின்னால் ஐந்து வருடங்களாக சுற்றிக் கொண்டிருப்பவள் இவள். வந்தது தனக்குப் போட்டியாக ஒரு பெண் என்று நினைத்து விட்டாள். அதனால் தான் அதிரனிடம் சீறிக் கொண்டும் நிற்கிறாள்.

"ஆமா நீ இங்க என்ன பண்ற.?" என்றவனிடம் முகத்தை ஒன்றரை முழத்திற்குத் தூக்கி வைத்து "அதைய நான் ஏன் உன்கிட்ட சொல்லணும்.? சொல்ல மாட்டேன் பே" என்றிட, "நான் கேட்ட சொல்ல மாட்ட சரி.. இப்ப உன் அண்ணன் வந்து கேட்பான்.. பதில் சொல்லித்தான் ஆகணும்ல.?" என்றான்.

ஆம் இவள் மாறனின் உடன்பிறந்த தங்கை ஹேமலோசினி.. கல்லூரியை முடித்து விட்டு வேலைத் தேடிக் கொண்டிருக்கிறாள். இவளின் கெட்ட நேரம் போலும் ஒரு வேலையும் இன்னும் அமையவில்லை. அதற்காக இவள் மாறனிடம் வாங்கும் திட்டுக்களையும் வெளியில் கூற முடியாது.

இப்போது வேலை விசயமாக தான் வெளியில் வந்தாள். அந்நேரம் தான் காவ்யாவும் அவளின் தந்தையும் இவர்களிடம் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டவள் அவர்களிடம் வர முயல, அவளுடன் வந்த பெண் ஏதோ வேறு வேலையென இவளை அழைத்துச் சென்று விட்டாள். அவ்வேலை முடிந்ததும் நேராக இங்கு வந்தும் விட்டாள்.

இவளுக்கு அதிரனைப் பிடிக்கும். அதை அவனிடமும் கூறி விட்டாள். இது அவளின் தந்தைக்கும் தெரியும். அவரும் எதுவும் கூறவில்லை. 'முதலில் வேலை ஒன்றைத் தேடி உன் சொந்தக்காலில் நில்.. பின்பு திருமணத்தைப் பற்றி யோசிக்கலாம்' என்று விட்டார்.

தந்தையை மீறி அவளால் எதுவும் செய்ய முடியாது. காரணம் தாயின்றி தன்னை வளர்த்தவர். அவரின் பேச்சை மீறவும் இவளால் முடியாது. அதனால் தான் அதிரனின் சம்மதத்திற்காக வாடாமல் அவனைத் தொந்தரவும் செய்கிறாள். அவன் இவளை ஏற்பானா.? மாட்டானா.? என்பதே யாரும் அறியாத ஒன்று.

"இப்ப உனக்கு என்ன தெரியணும்.? வந்தது யாருனு தெரியணுமா.?" என்ற கேள்வியை எழுப்ப, அப்போதும் அவள் உம்மென்றே அவனைப் பார்த்திட, "வந்தது உன் வருங்கால அண்ணி.. உன் அண்ணனை ரெண்டு வருசமா லவ் பண்றாங்களாமா.." என்று உண்மையை போட்டு உடைத்தான்.

கேட்ட ஹேமாக்கு தான் மயக்கம் வருவது போல் இருந்தது. "எனக்கு மயக்கமே வருது.. என்னைய
கொஞ்சம் பிடிங்க அதிரன்" என்று அவனின் மேல் சாய்ந்தாள் அதிர்ச்சியுடனே.!


மாறுவான்..
 

Author: AArani
Article Title: பாவை - 2
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Mrs Beenaloganathan

Active member
Joined
Mar 21, 2025
Messages
223
பொய் காதல் சொல்லி
பரிதவிக்கும் பெண்...
மெய்யான காதல் சொல்லி
பார்த்து காத்திருக்கும்
பாவை ஒன்று.... 🤩🤩
 

AArani

New member
Joined
Mar 27, 2025
Messages
25
பொய் காதல் சொல்லி
பரிதவிக்கும் பெண்...
மெய்யான காதல் சொல்லி
பார்த்து காத்திருக்கும்
பாவை ஒன்று.... 🤩🤩
Tnk u so much
 
Top Bottom